கத்திமுனையில் பாலியல் செய்ய முற்பட்டவனை குத்திக் கொன்ற பெண்மணி

Police Magazine(TamilNews Media Group): திருவள்ளூர் மாவட்டத்தின் சோழவரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரக்காடு அல்லிமேடு கிராமத்தை சேர்ந்த இளம்பெண் கௌதமி இயற்கை உபாதையைக் கழிப்பதற்கு அப்பகுதியில் உள்ள வயல்வெளிக்குச் சென்றார். அப்போது அதே ஊரைச் சேர்ந்த அஜித் என்பவன் அவரைப் பின்தொடர்ந்து கத்தியைக் காட்டி பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றான். சற்றும் தளராமல் கௌதமி அஜித்திடமிருந்து கத்தியைப் பிடுங்கி, தற்காப்புக்காக அஜித்தை கத்தியால் குத்தியுள்ளார். படுகாயம் அடைந்து சிறிது நேரத்திலேயே இறந்தான் அஜித். இதைத்தொடர்ந்து காவல் நிலையத்திற்கு நேரில் சென்று சம்பவத்தை விவரித்து சரண் அடைந்தார் கௌதமி. இளம்பெண் அளித்தத் தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த சோழவரம் காவல் துறையினர் இளைஞரின் சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து கௌதமியிடம் நடத்திய விசாரணையில், தற்காப்புக்காக மட்டுமே அஜித்தை, அவர் கத்தியால் குத்தியதும், அவருக்கு கொலை செய்யும் எண்ணம் இல்லை என்பதும் விசாரணையில் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து இளம்பெண் மீது இந்திய தண்டனைச் சட்டம் 302 IPC யின் கீழ் பதிவு செய்யப்பட்ட கொலை வழக்கை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P. அரவிந்தன் IPS அவர்கள் தற்காப்பு நடவடிக்கையான இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 100 IPC யின் கீழ் மாற்ற பரிந்துரை செய்தார். இதனால் அப்பெண்ணின் மீது கைது நடவடிக்கை தவிர்க்கப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் இத்தகைய செயல் மிகவும் போற்றத்தக்கது. மேலும் இவருக்கு சமூக வலைத்தளங்களில் ஏகப்பட்ட பாராட்டுகளும் குவிந்து வருகிறது.

1 / 1

1.